

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும், ஒமைக்ரான் சமூக பரவல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது.
அதன்படி தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி-நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை. டாஸ்மாக் மதுபான கடைக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகள் முற்றிலும் இயங்காது. குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரெயில்கள் மட்டும் ஓடுகின்றன. ஓட்டல்களில் பார்சல் சேவை செயல்படுகின்றன.
ரெயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. போலீசார் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை காண்பிப்பது அவசியம் ஆகும். பயணிகளை இறக்கிவிட்டு திரும்பும்போது அவர்களிடம் டிக்கெட் நகலை பெற்று வைத்திருக்க வேண்டும். டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
வெறிச்சோடிய சாலைகள்
நேற்று இரவு 10 மணியில் இருந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று இரவில் தொடங்கப்பட்ட வாகன சோதனை இன்றும் நீடித்தது.
சென்னையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 312 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்றது.
அத்தியாவசிய பணிகளுக்காக வாகனங்களில் சென்றவர்களை அடையாள அட்டையை பார்த்து உறுதி செய்த பிறகே போலீசார் அனுமதித்தனர். இதற்காக ஒவ்வொரு சந்திப்புகளில் 5 காவலர்கள் வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். முக்கிய சந்திப்புகளில் சாமியானா பந்தல்களை போட்டு தடுப்புகளை அமைத்து போலீசார் கண்காணித்தனர். இதன் காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் ஆள்நடமாட்டம் இன்றி இன்று வெறிச்சோடி காணப்பட்டன.
சென்னையை போன்று திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.