மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய 103 வயது தி.மு.க. பெண் தொண்டர்

தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று இருக்கிற மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் 103 வயது மூத்த பெண் தொண்டர் ஒருவர் சந்தித்து வாழ்த்து கூறினார்.
மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய 103 வயது தி.மு.க. பெண் தொண்டர்
Published on

சென்னை,

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறார். அந்தவகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை 103 வயது மூதாட்டி ஒருவர் அண்ணா அறிவாலயத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அந்த மூதாட்டியின் பெயர், ரங்கம்மாள். மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அவர் பல ஆண்டுகளாகத் தி.மு.க.வில் உறுப்பினராக இருந்து வருகிறார். தி.மு.க.வின் மூத்த பெண் தொண்டர் இவர் தான்.

மேலும், அவர், தன்னுடைய கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராகவும், தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார். 103 வயதிலும், கட்சி பணியாற்றி வரும் அவரை கண்டதும், மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று, தி.மு.க.வுக்காக உழைத்து வருவதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த ரங்கம்மாள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், தலைவர் கருணாநிதியை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது கனவாக போய் விட்டது. ஆனால் இன்றைக்கு மு.க.ஸ்டாலினைச் சந்தித்திருப்பது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்த, ரங்கம்மாள் நல்ல உடல் நிலையுடன், நினைவாற்றலுடன் பல விஷயங்களை நினைவு கூர்ந்தார். தி.மு.க.வின் மூத்த உறுப்பினராக விளங்கும் அவரிடம், அண்ணா அறிவாலயத்தில் நின்றிருந்த மற்ற நிர்வாகிகளும் வாழ்த்து பெற்றனர். மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறிய மூதாட்டியின் புகைப்படம் அண்ணா அறிவாலயத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com