

சென்னை,
தொகுதி மறுவரையறை தீர்மானம் குறித்து சட்டசபையில் அனல் பறந்த விவாதம் நடந்தது.
"தொகுதி மறுவரையறை குறித்து சில ஊடகங்களும், சில கட்சிகளும் தவறான கண்ணோட்டத்தோடு செய்தி வெளியிட்டுள்ளன. 543 எம்பிக்கள் என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்று தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முதல்-அமைச்சரும் அரசும் உறுதியாக இருக்கின்றனர். Fair Delimitation தேவையில்லை.. Freeze Delimitationதான் தேவை" என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் பேசிய உரை குறித்து அமைச்சர் பேசினார். 543 எம்பிக்கள் என்ற எண்ணிக்கையில் வேண் இருக்க வேண்டும் என்றுதான் தீர்மானத்தில் உள்ளது. அந்த தீர்மானத்தைத்தான் பேரவையில் நிறைவேற்றியுள்ளோம். முதலமைச்சர்கள் மாநாட்டில் 543 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் பேசவில்லை" என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைசர் ஆதவ் அர்ஜுனா, "திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது எம்.பிக்கள் எண்ணிக்கை உயர்த்த கூடாது என நகல் எரித்து போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் மசோதா வரும் போது திமுக வெளிநடப்பு செய்யக்கூடாது. வாஜ்பாய் கொண்டு வந்தது போன்று சிறப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். புறக்கணித்தால் அதுவும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்து விடும்.
தமிழ்நாட்டில் கோரிக்கை வைத்த நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத மத்திய அரசு, கோரிக்கையே வைக்காத போது தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்றால் அதில் கண்டிப்பாக அரசியல் இருக்கும்” என்றார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தொகுதி மறுவரையறை என்பது சட்டம். தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை கூட வேண்டுமா? குறைய வேண்டுமா? அதை தெளிவுபடுத்துங்க"என்றார்.
இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, "மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின் சிறப்பு சட்டத்தை வாஜ்பாய் கொண்டு வந்தார். அதை கொண்டு வர, உங்கள் எம்பி.,கள் உள்ளிட்டோர் குரல் கொடுங்கள், அது தான் எங்கள் கோரிக்கை" என்றார்.
திமுகவின் நிலைப்பாடு மாறுவதாக பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு பாமக கணேஷ்குமார் பதில் அளித்து கூறுகையில், 7.18%க்கு குறையாமல் இருந்தால் தொகுதி மறுவரையறையை ஆதரிப்பதாக தவெகவும் கூறியது; முந்தைய திமுக ஆட்சியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் பங்கேற்றார். திமுக தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெகவும் கையெழுத்திட்டது; தவெகவும், காங்கிரஸும் Fair Delimitation எனக் கூறிவிட்டு இப்போது நிலைப்பாட்டை மாற்றுகின்றன’ என்றார்.
பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் கூறியதாவது, “தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு நல்லது. 50% உயர்வு என வரும்போது தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை 59 ஆக உயரும்; தமிழக எம்பிக்களின் எண்ணிக்கையை 39-லிருந்து 59 ஆக உயர்த்தும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
தொகுதி மறுவரையறையில் அமித்ஷா மாற்றி மாற்றி பேசுகிறார் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார். மேலும் ”பா.ம.க நண்பர்கள் ராமதாஸை காப்பாத்துறத விட மோடி அமித்ஷாவை காப்பாத்துறதுல தான் குறியா இருக்கீங்க” என அவர் கூறினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இவ்வாறு தொகுதி மறுவரையறை தொடர்பாக த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க., பாமக, பாஜக உறுப்பினர்கள் மாறி மாறி தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் விவாதம் அனல் பறந்தது.