

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல் அமைச்சர் விஜய், தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடந்த தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய விஜய், “மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். கடந்த வாரம் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை மாற்றக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
543 எம்பிக்கள் என்ற எண்ணிக்கையை மாற்றக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து முதல் அமைச்சர் விஜய் தற்போது மாறியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அளித்து இருக்கும் அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருப்பதாவது; ஒவ்வொரு மாநிலங்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு மின்சார தேவை இருந்தது. நம்முடைய நிலங்கள் அதிகமாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதே மாதிரி ஒவ்வொரு மாநிலங்களின் தேவைகள், பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அடுத்த கூட்டம் தெலுங்கானாவில் வைக்கலாமா? என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 543- என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. யாரும் திரித்து பேச வேண்டாம். காவிரி விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம். எனவே அது குறித்து இந்த கவுன்சிலில் விவாதிக்கவில்லை. முல்லை பெரியாறு அணை உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் 39 எம்பிக்கள் தொடர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.தென் மாநிலங்களைத்தான் தொகுதி மறுவரையறை பாதிக்கும்” என்றார்.