

சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் இன்னும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிகவுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை. இக்கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழு உறுப்பினர்களுடன் திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழு உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த முறை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 4 தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றது.
இம்முறை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெறும் நோக்கத்தில் விசிக உள்ளதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. திமுக தரப்பில் விசிகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், திருமாவளவன் தலைமையில் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், சிந்தனை செல்வன் மற்றும் துணை பொதுச்செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்தாலோசிக்கும் உயர்நிலைக் குழு கூட்டம் நாளை (மார்ச் 23) நடைபெறவுள்ளது. இதன் பிறகு விசிகவின் நிலைப்பாடு என்ன என்பது உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், தேர்தல் அறிக்கை வெளியிடுவது மற்றும் விசிகவுக்கான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வு செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்படவுள்ளது.ஏற்கெனவே இரண்டு முறை தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், நாளை கலந்தாலோசித்து மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.