

வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் ரஷ்யா உதவியுடன் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் அணு உலையில் 2014-ம் ஆண்டும், 2-வது அணு உலையில் 2016-ம் ஆண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகளை கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர். தற்போது 5 மற்றும் 6-வது அணுஉலைகளை அமைப்பதற்கான நில அகழ்வு பணிகள் முடிவடைந்துள்ளன. இதனைத்தொடர்ந்து கட்டுமான பணிகளைத் தொடங்க இந்திய அணுசக்தி கழகம் முடிவு செய்தது.
இந்நிலையில், கூடங்குளம் அணுமின்நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்குகின்றன. தொடக்க நிகழ்வில் ரஷ்ய மற்றும் இந்திய அணுசக்தி கழக உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிதாக அமையவுள்ள 2 அணு உலைகள் மூலம் கூடுதலாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.