நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட்டில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆஜர்

கோப்புப்படம்
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு மன்னிப்பு கோரி அதிகாரிகள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடலூர் தேவநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அமைந்துள்ள தனியார் பள்ளியை அப்புறப்படுத்தக்கோரி பா.ஜ.க. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு பள்ளியை அப்புறப்படுத்தி, நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும், பள்ளிக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் எனவும் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
இதுதொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக வருவாய்த்துறை செயலாளர் அமுதா, கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்ட 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராகினர்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு மன்னிப்பு கோரி அதிகாரிகள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்கக்கோரி அரசுக்கு விண்ணப்பிக்கும்படி பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதனை பரிசீலிக்கும்படி வருவாய்த்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, அதிகாரிகளின் மன்னிப்பை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.






