தொடர் போராட்டம்: சிதம்பரம் மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை

தொடர் போராட்டம் காரணமாக சிதம்பரம் மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் போராட்டம்: சிதம்பரம் மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை
Published on

அண்ணாமலைநகர்,

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்த ஆண்டு தமிழக அரசு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியாக அறிவித்தது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களிடம் மட்டும் அரசு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டது.

மற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வசூலிக்கப்படுகிறது. ஒரே கல்லூரியில் இரு வேறான கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும், மற்ற அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம் வசூலிப்பது போல், இங்கேயும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த 11-ந்தேதி முதல் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வந்தனர். இவர்களது போராட்டம் 15-வது நாளாக நீடித்தது.

இந்தநிலையில் நேற்று மதியம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சீதாராமன் அறிவித்தார். மேலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியில் இருந்து உடனடியாக காலி செய்யவும் அவர் உத்தரவிட்டார்.

ஆனால் இதை ஏற்க மாணவர்கள் மறுத்து விட்டனர். மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறாமல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கார் ஷெட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com