வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

வளர்ச்சி திட்ட பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
Published on

ஒருங்கிணைப்பு கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. தலைமையில் நடந்தது. கலெக்டர் உமா, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பி.தங்கமணி, சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, கனிமத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்தும், மேற்கொண்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஒப்பந்த காலம்

மேலும் இந்த கூட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை தரமான முறையில், நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டுமென மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவால் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் சாரதா, நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்கள் (இணைபதிவாளர்) செல்வகுமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, இணை இயக்குனர் (மருத்துவபணிகள்) ராஜ்மோகன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பூங்கொடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com