

சென்னை,
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் சற்று அதிகரித்திருப்பதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக தஞ்சாவூர், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், சென்னையில் அம்பத்தூர், சோழிங்கநல்லூர், அண்ணாநகர், திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த பகுதிகளில் முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.