

சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.கொரோனா தொற்றின் 2வது அலையால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை ஈடு செய்ய தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு சிலிண்டர்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் ஆக்சிஜன்,தடுப்பூசி, மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதாக செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில், இன்றைய விசாரணையில் நீதிபதிகள் கூறுகையில், கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முடிவுகளை விரைந்து தெரிவிப்பதால், பரவலையும் விரைந்து கட்டுப்படுத்த முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி உட்பட அனைத்து மாநிலத்திற்கும் சமமான தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் தடுப்பூசி, மருந்து ஒதுக்கீடு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் கொரோனா பரவல் இரண்டாவது அலை விவகாரத்தில் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.