

சென்னை,
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஸ் வீட்டில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை லஞ்சமாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட புகாரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரும், தி.மு.க நிர்வாகியுமான பி.டி. அரசகுமாரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்த நிலையில், சோதனை குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட தகவலில், திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அங்கீகாரம், தர உயர்வு, டி.டி.சி.பி. அனுமதி பெற்றுத்தருவதாக கூறி திமுக ஆட்சியில் ரூ.100 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. பிடி அரசகுமார் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் சோதனை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் அலுவலக பூட்டை உடைக்க மத்திய குற்றப்பிரிவு முடிவு செய்துள்ளது. சோதனைக்கு போலீசார் வந்த நிலையில் பூட்டப்பட்டுள்ளதால் அலுவலகம் முன்பு காத்திருக்கின்றனர்.