நெல்லை மாமன்றத்தில் விசில் அடித்தபடி வந்த த.வெ.க. கவுன்சிலர் 2 மாதம் சஸ்பெண்டு

இந்த மாமன்றத்திற்கு என மரியாதை உள்ளது. இதன் வரலாற்றிலேயே இதுபோன்று யாரும் செயல்பட்டது கிடையாது.

நெல்லை மாமன்றத்தில் விசில் அடித்தபடி வந்த த.வெ.க. கவுன்சிலர் 2 மாதம் சஸ்பெண்டு
Published on

நெல்லை

நெல்லை மாமன்றத்தில் விசில் அடித்தபடி வந்த த.வெ.க. கவுன்சிலரை மேயர் ராமகிருஷ்ணன் 2 மாதம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

நெல்லை மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றபோது, த.வெ.க. கவுன்சிலர் அல்லா பிச்சை என்பவர், தோளில் கட்சி துண்டுடன் விசில் அடித்தபடி உள்ளே வந்துள்ளார்.

எதிர்ப்பு கோஷம்

இதற்கு மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாமன்றத்தில் விசில் அடிக்க கூடாது. மாமன்றத்தில் அதற்கு அனுமதியும் கிடையாது. மாமன்றத்திற்கு என ஒரு மரியாதை உள்ளது என கூறி உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.

அப்போது உறுப்பினர் ஒருவர் மேயரை நோக்கி, இது என்ன கேலிக்கூத்து. ஒரு முறை விசில் அடித்ததும் அதனை நிறுத்தும்படி நீங்கள் கூறினீர்கள். அவர் கேட்கவில்லை. மறுபடியும் மறுபடியும் விசில் அடிக்கிறார். நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா? இல்லையா என கேள்வி எழுப்பினர். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேயர் உத்தரவு

இதனை தொடர்ந்து பேசிய மேயர் ராமகிருஷ்ணன், அவர் இயக்கம் ஒன்றில் இணைந்திருக்கிறார். அதனால், அந்த இயக்கத்தின் சின்னம் பயன்படுத்துவது என்பது அவருடைய உரிமை. ஆனால், இந்த மாமன்றத்திற்கு என மரியாதை உள்ளது. இதன் வரலாற்றிலேயே இதுபோன்று யாரும் செயல்பட்டது கிடையாது.

அவர் வேண்டுமென்றே செய்திருக்கிறார். 2 முறை எச்சரித்தும், அதனை கேட்காமல் 3-வது முறையாக அவர் விசில் ஊதியுள்ளார். அவர் 9, 10 ஆகிய மாதங்களில் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என கூறி, 2 மாதங்களுக்கு அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com