10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் ஓரளவு குறைந்துள்ள நிலையில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி வரும் 19 ஆம் தேதி முதற்கட்டமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையில் தற்போதைய கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை முழு அளவில் நடத்த முடியாத நிலை இருப்பதால், பாடத்திட்டங்கள் கணிசமான அளவில் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலமாக கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பற்றிய முழு விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த விவரங்கள் நாளை மறுநாள் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதன் அடிப்படையில் இந்த கல்வி ஆண்டில் மீதம் இருக்கும் நாட்களில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com