

நாகர்கோவில்,
குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 33).
மாற்றுத்திறனாளியான அவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்த கடையில் கடந்த 9-ந் தேதி தென்தாமரைகுளம் போலீசார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சோதனையில் 3-வது முறையாக சபரிவர்மன் சிக்கியதால், அவரை போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி காலை, சபரிவர்மன் சிறையில் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சபரிவர்மன் இறந்த தகவல் அறிந்து அவரது மனைவி ஆனந்தவல்லி மற்றும் உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள் சபரிவர்மன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை போலீசார் அடித்துக் கொன்று விட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
அவரது சாவுக்கு காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சபரி வர்மனின் உடலை வாங்கமாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதற்கிடையில் சபரிவர்மன் இறந்தது குறித்து நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சத்தியமூர்த்தி விசாரித்தார். பின்னர் நாகர்கோவில் சிறைக்கு சென்று சிறைக்காவலர்கள் மற்றும் மற்ற கைதிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். அது மட்டுமின்றி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினும் நாகர்கோவில் சிறைக்குள் சென்று விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பிரேத பரிசோதனையில் சபரி வர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் சிறைக்குள் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, நாகர்கோவில் சிறையின் முதன்மை வார்டரான நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த திருமலை நம்பி, வார்டர்களான தேங்காபட்டணத்தை சேர்ந்த ஜெகன், சாமியார்மடத்தை சேர்ந்த சிவகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த 12-ந்தேதி இரவு சிறையில் சபரிவர்மனுக்கும், சக கைதிகள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கைதிகள் அவரை தாக்கி உள்ளனர்.
மேலும் சபரிவர்மனின் கை கால்களை கட்டிவைத்து சிறை வார்டர்களும், கைதிகளும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த சபரிவர்மனை சிறைக்காவலர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வார்டர்களுடன் சேர்ந்து சபரிவர்மனை தாக்கிய கைதிகள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரை தாக்கியது குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த விஷ்ணு (21), சாரதி (19), குலசேகரத்தை சேர்ந்த ஜெகன் (40), சரத், நெல்லையை சேர்ந்த பெருமாள், கன்னியாகுமரியை சேர்ந்த சேதுராம் (30), அரவிந்த் (27), கொட்டாரத்தை சேர்ந்த அஜித் (29) ஆகிய 8 கைதிகள் என்பது தெரியந்தது.
இதையடுத்து அவர்களின் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்ததோடு 8 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் சபரிவர்மன் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று கைது செய்யப்பட்டிருக்கும் வார்டர்கள் மற்றும் கைதிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சபரி வர்மனின் மரணத்திற்கு நீதி கேட்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுத்தும் வருகிறார்கள். அதனை வலியுறுத்தி வியாபாரி உடலை பெற்றுக்கொள்ள மறுத்து உறவினர்கள் நேற்று 3-வது நாளாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமானோர் திரண்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் திரண்டனர்.
இதற்கிடையே கைதான சிறை வார்டர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சபரிவர்மனை கைது செய்த தென் தாமரைக்குளம் காவல் நிலைய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.