திருமணமான 3 மாதத்தில் கணவனை பிரிந்த மகள்: மன உளைச்சலில் தந்தை விஷம் குடித்து தற்கொலை


திருமணமான 3 மாதத்தில் கணவனை பிரிந்த மகள்: மன உளைச்சலில் தந்தை விஷம் குடித்து தற்கொலை
x

கோப்புப்படம் 

திருவண்ணாமலையில் மகள், கணவனை பிரிந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ஏனாதவாடி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (44 வயது), கட்டிட தொழிலாளி. இவருக்கு மங்கலவள்ளி என்ற மனைவியும், நதியா என்ற மகளும் உள்ளனர். மகள் நதியாவுக்கும், சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணமான 3 மாதத்தில் நதியாவிற்கும், மகேஸ்வரனுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு நதியா கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி நதியாவை அவரது கணவருடன் சேர்த்து வைப்பதற்காக பெருமாள் மற்றும் அவரது உறவினர்கள் மகேஸ்வரன் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மகேஸ்வரன் நதியாவுடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுடன் வீடு திரும்பிய பெருமாள் தன்னுடைய நிலத்திற்கு சென்று விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி மங்கலவள்ளி மோரணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story