தவறான சிகிச்சையால் மகளின் கால் பாதிப்பு - தலைமைச் செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காவலர்

தலைமைக் காவலர் கோதண்டபாணி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தவறான சிகிச்சையால் மகளின் கால் பாதிப்பு - தலைமைச் செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காவலர்
Published on

சென்னை,

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவரது மகள் பிரதிக்ஷா(வயது 10) சிறுநீரக பிரச்சினை காரணமாக 3 வயது முதல் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக சிறுமி உட்கொண்டு வந்த நிலையில், மாத்திரையின் எதிர்விளைவு காரணமான பிரதிக்ஷாவின் வலது கால் பாதத்தில் கடுமையான அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மீண்டும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிரதிக்ஷாவுக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாக தவறாக கணித்ததன் விளைவாக பாதம் கருகியதுடன் உடலில் உள்ள இரத்தம் கெட்டுப்போனதாக கூறப்படுகிறது.

மேலும் தங்கள் அனுமதியின்றி இரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டதன் விளைவால் தனது மகளுக்கு வலிப்பு நோயும் ஏற்பட்டது என கோதண்டபாணி குற்றம் சாட்டியுள்ளார். இவை அனைத்தும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கால் நடந்தது எனவும், மருத்துவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோதண்டபாணி தலைமை செயலகம் அருகே பாதிக்கப்பட்ட தனது மகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றனர். இருப்பினும் கோதண்டபாணி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவலர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com