

சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோதினி (வயது 30). இவர், கடந்த 30-ந்தேதி சின்னபோரூர் அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்து கொண்டார். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வினோதினி, அங்கு சிகிச்சை பலனின்றி 4-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
அரசு டாக்டர்களின் கவனக்குறைவாலும், தவறான சிகிச்சையாலும் தான் வினோதினி இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் வினோதினியின் உடலை வாங்க மறுத்து டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்தநிலையில் நேற்றும் வினோதினியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை வினோதினியின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.