போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

ரூ.3 கோடி மதிப்புள்ள 9 சென்ட் இடம் போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுப்பேட்டை,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள அங்குசெட்டிப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன். அவரது மகன் சிற்றரசு (வயது 33). இவருக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள 9 சென்ட் இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் நாகராஜ் மனைவி தனலட்சுமி என்பவருக்கு சட்டத்திற்கு புறம்பாக போலி ஆவணங்கள் தயாரித்து கடந்த 4-ந் தேதி புதுப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கிரையம் பெற்றுள்ளார்.
இதனால் தனது வீட்டு மனையை போலியான ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்ததாக தெரிவித்து, இதுகுறித்து சிற்றரசு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஹரி கிருஷ்ணன், நாகராஜ், அவரது மனைவி தனலட்சுமி, ஆவண எழுத்தர் சீனுவாசன், புதுப்பேட்டை சார் பதிவாளர் ராஜேஷ் ஆகிய 5 பேர் மீதும் போலியாக ஆவணங்கள் தயாரித்தல், சட்டவிரோதமாக பதிவு செய்தல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






