தீபாவளி பண்டிகை: அரசு விரைவு பஸ்களில் நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு விரைவு பஸ்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை: அரசு விரைவு பஸ்களில் நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
Published on

சென்னை,

தீபாவளி பண்டிகை நவம்பர் 4-ந் தேதி (வியாழக்கிழமை) வருகிறது. அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும். இதனால் சென்னையில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவது உண்டு. இதற்காக பலர் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சிலர் சிறப்பு ரெயில்கள் அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு விரைவு பஸ்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், கும்பகோணம், நாகப்பட்டினம், திருப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சொகுசு பஸ்களும் படுக்கை வசதி கொண்ட பஸ்களும், குளிர்சாதன பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி கூறியதாவது:-

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4-ந் தேதி வருவதையொட்டி வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. இந்த மாதம் 29-ந் தேதியில் இருந்து சிறப்பு பஸ்கள் விடலாமா என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. வழக்கமாக தென் மாவட்டங்களுக்கு அதிகமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது உண்டு. அதேபோல் இந்த ஆண்டும் பயணிகளின் கூட்டத்தை பொறுத்து பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com