

சென்னை,
முழுமையான அமைச்சரவை அமைக்க தாமதம்: தமிழக அரசின் செயல்பாடு ஏமாற்றமளிக்கிறது! பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்று கணிசமான நாட்கள் கடந்துள்ள நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்களை மட்டுமே நியமித்து விட்டு, முழுமையான அமைச்சரவையை அமைக்காமல் இருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு போன்ற மிகப்பெரிய மாநிலத்தில் வேளாண்மை, உயர்கல்வி, போக்குவரத்து, வருவாய் மற்றும் பேரிடர் துறை, தொழிலாளர் நலன், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி துறை உள்ளிட்ட 20 முக்கிய துறைகள் முழுமையான நிர்வாக கவனத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்பட்டு வரும் காலதாமதம் காரணமாக அரசின் செயல்திறன் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்தார்கள் தவிர, நிர்வாக தாமதங்களுக்காக அல்ல. அரசு அமைந்த உடனேயே முழுமையான அமைச்சரவையை ஏற்படுத்தி, ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பான அமைச்சர்களை நியமித்து மக்கள் நல திட்டங்களை வேகமாக செயல்படுத்த வேண்டியது அரசின் அடிப்படை கடமையாகும்.
எனவே, தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக அமைச்சரவை விரிவாக்கம் செய்து, நிர்வாகத்தில் நிலவும் குழப்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.