

கோவை ,
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 23-வது வார்டு சித்ரா பகுதி சவுபாக்கியா நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் அருண்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு மருந்து அடித்தல், தூய்மை பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் அருண்ராஜ் தீவிரமாக கண்காணித்தார். வீடுகளில் கொசு புழுக்கள் உற்பத்தியாகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்கள், பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றில் மழைநீர் தேங்குவதை தவிர்த்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், அலட்சியமாக இருக்காமல் உடனடியாக அருகிலுள்ள அரசு சுகாதார நிலையத்தை அணுகி உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.டெங்கு பாதிப்பை முற்றிலுமாக தடுக்க அரசின் நடவடிக்கைகளுடன் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு டெங்கு இல்லாத கோவையை உருவாக்குவோம்.