தமிழகத்தின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அமைய வேண்டும் என்பதே என் ஆசை மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அமைய வேண்டும் என்பதே என் ஆசை என்று பொருளாதார ஆலோசனை குழுவிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அமைய வேண்டும் என்பதே என் ஆசை மு.க.ஸ்டாலின் பேச்சு
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் கூட்டம் காணொலி காட்சி மூலம் முகாம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள் எஸ்தர் டப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் டிரீஸ், எஸ்.நாராயண், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாட்டைத் தன்னிகரற்ற மாநிலமாக உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழு இது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பேரில் மூவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். எஸ்தர் டப்லோ, ஜீன் டிரீஸ் இருவரும் இந்தியாவைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளீர்கள். எனவே தமிழ்நாட்டின் களநிலவரம் குறித்து உங்களுக்கு நான் அதிகம் விளக்கிச் சொல்லத் தேவையில்லை.

அனைத்து சமூகங்களையும், பிரிவினரையும், மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் திராவிட மாடல். அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இதற்கு நீங்கள் வழிகாட்ட வேண்டும்.

பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்கள்; சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள் குறித்த ஆலோசனை; பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு சமமான வாய்ப்புரிமைக்கு ஆலோசனை; மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பான ஆலோசனை;

மாநிலத்தின் மொத்தமான நிதி நிலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனை; மக்களுக்கு சேவை செய்வதற்கான மாநிலத் திறனை மேம்படுத்த ஆலோசனை; புதிய திட்டங்கள் மற்றும் நிறைவேற்றக்கூடிய தீர்வுகளுக்கான ஆலோசனை ஆகியவற்றை உடனுக்குடன் வழங்க வேண்டும். கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு நாம் நேரில் சந்திப்போம்.

இப்படி ஒரு குழுவை அமைத்ததன் மூலமாக தமிழ்நாட்டின் பெருமை உலகளாவியதாக ஆகிவிட்டது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலைவாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமைய வேண்டும். இக்கனவுகள் சாதாரணமாக நிறைவேறி விடாது என்று எனக்கும் தெரியும்.

தமிழ்நாடு அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கின்றன.

நிதி ஆதாரம் என்பது விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சில துறைகளின் மூலமாக மட்டும்தான் வருகிறது. வரி வசூலில் இருந்த மாநில உரிமைகளை மத்திய அரசு ஜி.எஸ்.டி. மூலமாக பறித்துவிட்டது. அதனால் வரி வசூலை நம்ப முடியாது.

நமது வளங்களைக் கொண்டு நம்மை வளப்படுத்திக் கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம். அதற்கென உள்ள வழிமுறைகளை தமிழ்நாட்டு அரசுக்கு காட்டுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் இயற்கை வளம், சீரான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. மனித வளம் உள்ளது. சமூக பொறுப்புணர்வு உள்ளது. உலகம் அறிந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் உலகில் நூற்றுக்கணக்கான நாடுகளில் வாழ்கிறார்கள். இந்த அடித்தளத்தை கொண்டு வளர நினைக்கிறோம். அதற்கு நீங்கள் வழிகாட்டுங்கள். சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தி.மு.க. தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி.

தெற்காசியாவிலேயே தொழில் முதலீடுகளுக்கு மிகவும் உகந்த, உலகத்துக்கு மனிதவளத்தை தரும் மாநிலமாக மாற வேண்டும். ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதாரத்திலும், சமூக ரீதியாகவும் இங்கு இருக்கக்கூடாது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை முன்னுதாரணமாக கொண்டு வளருவதற்கு திட்டமிடும் சூழலை உருவாக்க ஆலோசனை வழங்க வேண்டும். என்னுடைய இந்த கனவுகள் சாதாரண சீர்திருத்தங்கள் மூலமாக மட்டும் சாத்தியமாகிவிடாது. முழுமையான மாற்றம், அதிரடியான மாற்றம் மூலமாகத்தான் சாத்தியமாகும். எத்தகைய மாற்றத்துக்கும் தயாராக தமிழ்நாடு அரசு இருக்கிறது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதரும் மகிழும் வகையில், இது எமது அரசு என்று சொல்லி அனைவரும் பெருமைப்படும் வகையில் இந்த அரசு இருக்க வேண்டும்.

அந்த ஆசையை, கனவை நிறைவேற்றும் கருவிகளில் நீங்களும் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com