

கோவை,
கோவை கெம்பட்டிகாலனியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது48). தங்கப்பட்டறை தொழிலாளி. இவர் பூண்டி வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக கடந்த 7-ந் தேதி தனது நண்பர் மாரியப் பன் என்பவருடன் வெள்ளியங்கிரி கோவில் அடிவாரத்துக்கு வந்தார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்து விட்டு நண்பருடன் மலையேற தொடங்கினார்.
முதல் மலையில் ஏறிக்கொண்டு இருக்கும் போது ஹரிதாசுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து ஹரிதாசை டோலி கட்டி மலையடிவாரத்திற்கு தூக்கிக்கொண்டு வந்தனர்.
அங்கிருந்த மருத்துவகுழுவினர் ஹரிதாசை பரிசோதனை செய்தனர். இதில் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப் ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.