திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது
திருமலை,
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இதனால் திருமலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிலாத்தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசன வரிசையில் சென்ற பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம், குடிநீர், மோர், பால் ஆகியவற்றை ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் வழங்கினர். அதேபோல் நாராயணகிரி தோட்டத்தில் உள்ள ஜெர்மன்செட் கொட்டகைகளில் பக்தர்கள் நிரம்பினர்.
நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணிவரை 44 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட்) டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.நேற்று முன்தினம் 71 ஆயிரத்து 249 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கல்யாணக்கட்டாகளில் 22 ஆயிரத்து 901 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 4 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.






