திருவண்ணாமலையில் 19 மாதங்களுக்கு பிறகு கிரிவலம் சென்ற பக்தர்கள் கொட்டும் மழையிலும் பரவசம்

திருவண்ணாமலையில் 19 மாதங்களுக்கு பிறகு நேற்று பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி பரவசத்துடன் நடந்தனர்.
திருவண்ணாமலையில் 19 மாதங்களுக்கு பிறகு கிரிவலம் சென்ற பக்தர்கள் கொட்டும் மழையிலும் பரவசம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கோவில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

வழக்கமாக மகாதீபம் ஏற்றப்படும் நாளன்றும், பவுர்ணமி அன்றும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மதியம் 1.03 மணிக்கு தொடங்கி நேற்று பிற்பகல் 2.51 மணிக்கு நிறைவடைந்தது.

ஐகோர்ட்டு அனுமதி

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது. மேலும் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி செல்வார்கள். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளிக்கும். மலை ஏறி இந்த மகாதீபத்தை தரிசனம் செய்யவும் தடை செய்யப்பட்டது.

இந்தநிலையில், ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

கொட்டும் மழையிலும்...

தொடர்ந்து 19 மாதங்களுக்கு பிறகு இந்தமாதம் மகாதீபத்தை முன்னிட்டு பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை 11 மணி வரை மழை பெய்தது. அப்போது கொட்டும் மழையிலும் குடையுடன் பக்தர்கள் பரவசத்துடன் கிரிவலம் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com