

சென்னை,
வெற்று விளம்பரங்களைக் கைவிட்டு சட்டம்-ஒழுங்கைக் காக்க நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தருமபுரி டவுன் பேருந்து நிலையத்தில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில், வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஓர் இளம்பெண் மீது நடத்தப்பட்டிருக்கும் கத்திக்குத்துச் சம்பவம் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு, இந்தச் சம்பவம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கின் அவல நிலையைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் மாவட்டத் தலைநகரத்தின் பேருந்து நிலையத்திலேயே, ஓர் இளம்பெண்ணுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றால், சாமானியப் பெண்கள் எங்குதான் நிம்மதியாக நடமாட முடியும்? ‘சிங்கப்பெண் படை’ போன்ற அறிவிப்புகள் அனைத்தும் வெறும் காகித அளவிலும், அரசு விளம்பரப் பலகைகளிலும் மட்டுமே சுருங்கிப் போய்விட்டனவா என்று தமிழகப் பெண்கள் இன்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, விஜய் தலைமையிலான அரசு இனியாவது தனது வெற்று விளம்பரப் போக்கைக் கைவிட்டு, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், தருமபுரி சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணுக்குச் சிறந்த மருத்துவ உதவியை உறுதி செய்வதோடு, பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் ரோந்துப் படைகளை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.