ஓடவில்லை.. ஒளியவில்லை.. பதுங்கவில்லை - விஜய்க்கு எ.வ.வேலு பதிலடி

வரும் 15-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவேன் என்று எ.வ.வேலு கூறினார்.
ஓடவில்லை.. ஒளியவில்லை.. பதுங்கவில்லை - விஜய்க்கு எ.வ.வேலு பதிலடி
Published on

சென்னை,

லஞ்ச ஒழிப்புத்துறை

தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சாலைகளை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. எந்த இடத்திலும் பணிகளே நடைபெறாத நிலையில், முன்கூட்டியே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கோடிக்கணக்கில் தொகை விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.

சிங்கப்பூர் பயணம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து, தவெக அரசு அமைந்த பிறகு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, துறை அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எ.வ.வேலு மற்றும் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் கடந்த ஜூன் 25-ம் தேதி சோதனை நடத்தினர். அடுத்த நாளான 26-ம் தேதி எ.வ.வேலு மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார் அங்கு உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விஜய் விமர்சனம்

இதற்கிடையில், கரூரில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் பேசுகையில், ஒருவர் வெளிநாட்டில் போய் ஒளிந்து கொண்டார். வெளிநாடு என்றதும், ஸ்டாலின் சார் என்று நினைத்துவிட போகிறீர்கள். அவர் இல்லை. எனக்கு எப்போதுமே ஸ்டாலின் சார் மேல் தனி பாசம் உண்டு. அவர் கிடையாது. சிங்கப்பூருக்கு செக்கப்புக்கு போனாரே அவர் என்று எ.வ.வேலுவை தாக்கி விஜய் பேசினார்.

எலிசபெத் மருத்துவமனை

இந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மருத்துவ சிகிச்சை முடித்துக்கொண்டு சிங்கப்பூரில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சிங்கப்பூரில் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் 2016 முதல் இதயப் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வருகிறேன்; சிங்கப்பூர் செல்ல கடந்த மாதம் 15ம் தேதியே விசாவுக்கு விண்ணப்பித்தேன். 15ம் தேதி விண்ணப்பித்து விசா கிடைத்தவுடன் 17ம் தேதி டிக்கெட் எடுத்தேன். சிங்கப்பூர் புறப்பட்டுக் கொண்டிருந்த அன்றுதான் போலீசார் சோதனைக்கு வந்தார்கள். போலீசார் சோதனைக்கு வந்ததால் சிங்கப்பூர் பயண டிக்கெட்டை மாற்றி புக் செய்தேன். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதால் அன்று முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.

ஒவ்வாமை, நரம்பு மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் எனக்கு உள்ளது; சிங்கப்பூரில் ஜூன் 29ம் தேதி நியூரோ பிரச்சனைக்காக சிகிச்சை பெற்றேன்; 30ம் தேதியன்று வயிறு தொடர்பான பிரச்சனைக்கு சிகிச்சை பெற்றேன்; ஜூலை 3-ம் தேதி இதய மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன். நான் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது; அவற்றை காண்பிக்க தயார்.

ஓடுகிறேன். ஒளிகிறேன்

ஜூலை 3ஆம் தேதி ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டது. அதற்கு உரிய மரியாதை கொடுத்து பதில் கடிதம் கொடுத்தேன். ஜூலை 3இல் கொடுத்த சம்மனுக்கு 10 நாள்களுக்குப் பிறகு வருவதாக கடிதம் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பதில் அளித்தேன். மீண்டும் 9ஆம் தேதி வரச்சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அளித்தது. விசாரணைக்கு ஒத்துழைப்பதாக நான் கூறியும் ஓடுகிறேன். ஒளிகிறேன் எனக் கூறுகின்றனர்.

நான் ஓடவில்லை. ஒளியவில்லை. பதுங்கவில்லை; ஓடுவது, ஒளிவது, பதுங்குவது திமுகவினரின் பழக்கம் இல்லை. திமுக எங்களை அப்படி வளர்க்கவில்லை; நான் எந்த குற்றமும் செய்யவில்லை, வரும் 15-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவேன். ஒத்துழைப்பதாக எனது பயணம் பற்றி தங்களின் கற்பனைகளை அவிழ்த்துவிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com