கொல்லிமலை புளியஞ்சோலையில் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்

கொல்லிமலை புளியஞ்சோலையில் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்
கொல்லிமலை புளியஞ்சோலையில் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்
Published on

சேந்தமங்கலம்:

கொல்லிமலை புளியஞ்சோலையில் உள்ள ஆற்றில் மூழ்கி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பேக்கரி தொழிலாளி பலியானார்.

பேக்கரி தொழிலாளி

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா சக்கம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 25). இவர் அங்குள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மோகன்ராஜ் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களான துறையூர் பகுதியை சேர்ந்த புகழேந்தி, மணிகண்டன், மோகன், யுவராஜ் ஆகிய 4 பேருடன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தெற்கு பகுதியில் உள்ள புளியஞ்சோலைக்கு சுற்றுலா வந்தனர்.

பின்னர் அங்குள்ள ஆற்றில் அனைவரும் ஆனந்தமாக குளித்தனர். அப்போது மோகன்ராஜ் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். ஆற்றில் குளித்து கொண்டிருந்த மோகன்ராஜ் காணாததால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை,

விசாரணை

இதையடுத்து நண்பர்கள் வனத்துறையினர் மற்றும் வாழவந்தி நாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய மோகன்ராஜை தேடினர். அப்போது ஆற்றின் கரையோரம் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் மோகன்ராஜ் உடல் கரை ஒதுங்கியது.

இதையடுத்து போலீசார் மோகன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com