ஜூன் 19 முதல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு இலவச உண்டி, உறைவிட வசதி உள்ளது.
ஜூன் 19 முதல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
Published on

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2025-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர், நாகலாபுரம் மற்றும் ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி 13.6.2025 உடன் முடிவடைந்த நிலையில், தற்போது 19.6.2025 முதல் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

நேரடி சேர்க்கையில் சேர விரும்பும் மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையம், தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர், நாகலாபுரம், மற்றும் ஏரல் ஆகியவற்றிற்கு வருகை தந்து நேரடியாக சேர்ந்து கொள்ளலாம். மாநிலம் முழுவதும் உள்ள சேர்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற்பிரிவுகள் விவரம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு/2021-ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்.

நேரடி சேர்க்கைக்கான கட்டணத் தொகை ரூ.250-ஐ சேர்க்கையின் போது நேரடியாக செலுத்தி சேர்ந்து கொள்ளலாம்.

நேரடி சேர்க்கையில் சேர விரும்புவோர் 8-ம் வகுப்பு/ பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு நகல்களுடன் தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளத்திலுள்ள தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் (0461-2340133/ 9499055810), வேப்பலோடை (0461-2267300/ 9499055814), திருச்செந்தூர் (04639-242253/ 9499055812), நாகலாபுரம் (7373906100/ 9499055816) மற்றும் ஏரல் (9442166371) அலுவலகத்திற்கு நேரில் வருகை தர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு இலவச உண்டி, உறைவிட வசதியும் உள்ளது. தகுதியுள்ள மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com