

சென்னை,
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று பேசிய இயக்குனர் பாக்கியராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று 'டிசம்பர் 3' இயக்கத்தைச் சேர்ந்த தீபக் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பிரதமரை விமர்சிப்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று ஒரு உவமையாக சொல்லியிருக்கிறார்கள். இது மனவருத்தத்தை அளிப்பதாக உள்ளது. உங்கள் அரசியல் எதிரிகளின் மீது விமர்சனத்தை வைப்பதற்காக மாற்றுத்திறனாளிகளின் இயலாமையை உவமைப்படுத்தி சொல்லாதீர்கள். இது அருவருக்கத்தக்கது என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மாற்றுத்திறனாளிக்கும் மனித உரிமை இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கும் மனித மாண்பு இருக்கிறது. அரசியல் எதிரிகளை மாற்றுத்திறனாளிகளை கொண்டு கிண்டல் செய்துவிட்டு அதன்பிறகு நாங்கள் மாற்றுத்திறனாளிகளை மதிக்கிறோம். அவர்களை ஏளனப்படுத்துவதற்காக பேசவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு சரத்து 92 ஒன்றுக்கு கீழே இதை வழக்காக பதிவு செய்து இயக்குனர் பாக்கியராஜூக்கு தகுந்த தண்டனை தர வேண்டும் என்று கூறியுள்ளார்.