பொது இடத்தில் சிறுமியிடம் அத்துமீறிய 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

காதலிக்க வற்புறுத்தி பொது இடத்தில் சிறுமியிடம் அத்துமீறிய 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து மதுர ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பொது இடத்தில் சிறுமியிடம் அத்துமீறிய 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

மதுரை, 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர், தனது நண்பருடன் சேர்ந்து பொது இடத்தில் வைத்து தன்னை காதலிக்குமாறு கூறி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த சிறுமி, மறுத்ததால் அவரது கையைப்பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி அளித்த புகாரின்பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து பாரத், மகாராஜா ஆகியோரை கைது செய்தனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, 17 வயது சிறுமியை பொது இடத்தில் வழிமறித்து அவரது கையைப்பிடித்து மனுதாரர்கள் அத்துமீறி உள்ளனர். இதுகுறித்து அந்த மாணவி, மாஜிஸ்திரேட்டுவிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே மனுதாரர்களுக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது, என்று ஆட்சேபம் தெரிவித்தார்.

விசாரணை முடிவில், மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது என்பதால், அவர்களுக்கு ஜாமீன் வழங்க இயலாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com