நெல்லையில் 14 குவாரிகளை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு

14 குவாரிகளையும் நிரந்தரமாக மூட மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை கோர்ட்டும் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் 14 குவாரிகளை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த கல் குவாரி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நெல்லை கலெக்டர் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் அடிப்படையில் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி 54 குவாரிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து குவாரி உரிமையாளர்கள் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் தடை விதிக்கப்பட்ட 54 குவாரிகளில் 40 குவாரிகளை மீண்டும் பயன்படுத்த கணிமவளத்துறை இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது. கோர்ட் உத்தரவின்படி இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் 54 குவாரிகளில் 14 குவாரிகள் கடுமையான விதிமீறல்களை செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதால், அந்த 14 குவாரிகளையும் நிரந்தரமாக மூட மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை கோர்ட்டும் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 40 குவாரிகளுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நெல்லை கோட்டாட்சியர் ஒருவார காலத்தில் நோட்டீஸ் மூலம் விளக்கம் கேட்டு முடிவெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com