மக்களைத் தேடி செல்லும் அரசாக தி.மு.க அரசு உள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அழாத பிள்ளைக்கும் பால் கொடுப்பவள் தான் உண்மையான தாய். அத்தகைய தாயாக தி.மு.க. அரசு என்றைக்கும் இருக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மக்களைத் தேடி செல்லும் அரசாக தி.மு.க அரசு உள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காது கேளாதோர் வாரத்தையொட்டி மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக ரூ.98.80 லட்சம் மதிப்புள்ள உயர்தர செவித்திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகள் வழங்கினார்.

மேலும் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவ மையத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:-

உலக காதுகேளாதோர் வாரம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 20 முதல் 26 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை பற்றி நான் சொல்ல வேண்டும் என்றால், ஏதோ இந்த ஒரு வாரம் மட்டும் மக்களைக் கவனிக்கும் அரசு அல்ல; தொடர்ந்து மக்களை கவனித்துக்கொண்டு இருக்கக்கூடிய அரசு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

குறிப்பாக, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களைக் கைதூக்கி விடும் அரசாகத்தான் திராவிட முன்னேற்றக்கழக அரசு இருக்கிறது. எப்போது எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்திருக்கிறதோ, அப்பொழுது எல்லாம் அதை தொடர்ந்து நாம் நிறைவேற்றி கொண்டும் இருக்கிறோம்.

உயர்தர செவித்திறன் குறைபாடு கண்டறியும் கருவிகளை காது, மூக்கு, தொண்டை துறை தலைவர்களிடம் முதலமைச்சர் வழங்கினார்

தலைவர் கலைஞர் முதல் முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது நான் ஒரு இளைஞனாக இருந்தேன். இப்போதும் நான் அப்படி தான் இருக்கிறேன். தலைவர் கலைஞர் முதல்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில் தன்னுடைய பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் தனக்காக கொண்டாடாமல், தன்னுடைய பெருமைகளை மட்டுமே எடுத்துச் சொல்லும் விழாவாக நடத்தாமல், அந்த விழா மக்களுக்கு பயன்பட வேண்டும், மக்களுக்காக கொண்டாடப்பட வேண்டும் என்ற நிலையிலே, பல திட்டங்களை தனது பிறந்தநாள் மூலமாக நாட்டுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

காதுகேளாதவர்க்குக் கருவி மாட்டுவோம். இதுதான் திராவிட முன்னேற்றக்கழக அரசு. பெரிய விஷயங்களைப் பார்க்கும்போது சின்ன விஷயங்கள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள். அது தவறானது, திராவிட மாடல் ஆட்சியில் பெரியவை மட்டுமல்ல சின்னவையும் தெரியும். அனைவரது கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது.

இந்த உயரிய நோக்கத்தை மொத்தமாகச் செயல்படுத்துவதற்காகத்தான் 2009-ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் உருவாக்கிக் கொடுத்தார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காது நுண் எலும்புக்கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை இதுவரையில் 4,101 குழந்தைகளுக்குச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 327 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சைக்காக 6 லட்சத்து 36 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அறுவைச் சிகிச்சை செய்ய இயலாத குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை செய்யப்படுகிறது. அதற்கு 4 கோடி ரூபாய் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழுதடைந்த உபகரணங்களை மாற்றித் தருவதற்காக 3.62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ், இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 572 பேருக்கு 108 கோடி ரூபாய் செலவில் புதிய காது கேட்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை மேலும் தொடருவதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நவீன கருவிகளை வாங்குவதற்கு 10 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கிருஷ்ணகிரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 98.9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர செவித்திறன் கருவிகளை நான் வழங்கி இருக்கிறேன். புதிய காது கேட்கும் கருவிகளை வழங்கி இருக்கிறேன். பழுதடைந்த கருவிகள் மாற்றித் தரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com