

சென்னை,
தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரத்தையும், குடிநீர் வசதியையும் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டுப் பிரச்சினைகளால் தமிழகம் முழுவதும் தாய்மார்களும், முதியவர்களும் அன்றாடம் தெருவில் இறங்கிப் போராடும் அவலநிலை ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது. அந்த வகையில் திருவள்ளூர் அத்திப்பட்டு, சென்னை கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒட்டுமொத்தப் பகுதியும் இருளில் மூழ்கியுள்ளதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். உழைக்கும் எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தராமல் அவர்களை வீதிக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ள தவெக அரசின் நிர்வாகத் தோல்வி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
லேசான காற்று வீசினாலே மின் விநியோகம் நிறுத்தப்படுவதால் மோட்டார்கள் இயங்காமல் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்துப் புகார் அளிக்க முயன்றால் மின்வாரிய அதிகாரிகள் தொலைபேசிகளை அணைத்து (Switch off) வைப்பதும், மக்களை அலைக்கழிப்பதுமாகப் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகின்றனர்.
பகலெல்லாம் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வரும் உழைக்கும் மக்கள், இரவில் நிம்மதியாகத் தூங்கக்கூட வழியின்றி குழந்தைகளுடன் தவிக்கும் அவலநிலை தவெக ஆட்சியில் அரங்கேறி வருகிறது. எனவே ஜோசப் விஜய் தலைமையிலான அரசு உடனடியாகத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரத்தையும் குடிநீர் வசதியையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.