

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் அதிகரிக்க வடமாநிலத் தொழிலாளர்கள் தான் காரணம் என்று அமைச்சர் தோ.மோ. அன்பரசனும், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமுவும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பிழைப்பைத் தேடிவரும் ஏழை எளிய புலம்பெயர் தொழிலாளர்களை, இது நாள்வரை "பானிபூரி விற்பவர்கள்" என்று குறிப்பிட்டு, அவர்களைக் கிண்டலடித்து வெறுப்பை விதைத்த திமுக, தற்போது ஒரு படி மேலே சென்று, அவர்களைக் கஞ்சா வியாபாரிகள் எனப் பழிசுமத்தியிருப்பது கொடூரமானது.
தனது திறனற்ற நிர்வாகத்தால் நேரும் கொடூர குற்றங்கள் தொடங்கி கஞ்சா விற்பனை வரை அனைத்திற்கும் அப்பாவி வடமாநிலத் தொழிலாளர்களைக் கைகாட்டி, ஓடி ஒளிந்து கொள்ள திமுக அரசு முயற்சிப்பது கேவலமானது! சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைத் திசைதிருப்ப புலம்பெயர் தொழிலாளர்களைப் பலிகடாவாக்கும் திமுகவின் கேவலப்பட்ட தேர்தல் யுக்தி தமிழக மக்களிடையே என்றும் எடுபடாது! அராஜக திமுக அரசும் மீண்டும் ஆட்சி அரியணை ஏறாது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.