'ஓ.டி.பி.' எண் கேட்காமல் தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை.. புதிய நடைமுறைகள் வெளியீடு

கோப்புப்படம்
‘ஓ.டி.பி.’ எண் கேட்காமல் தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும், அ.தி.மு.க.வினருமே கூட முதல்-அமைச்சர் பின்னால் அணி திரள்வதை கண்டு தாங்க முடியாமல் அரண்டுபோய் அவதூறுகளை பரப்பி மக்களை குழப்ப பார்த்து அதில் தோற்றுப்போனதால், கோர்ட்டுக்கு சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை எப்படியாவது தடுக்க முடியாதா? என தவம் கிடந்தார் பழனிசாமி.
கோர்ட்டை நாடி தடை வாங்க முயன்ற அ.தி.மு.க.வுக்கு கோர்ட்டு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி விட்டது. மேலும் 'ஓ.டி.பி.' எண் மட்டும் கேட்காமல் வழக்கம் போல உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அனுமதித்துள்ளது கோர்ட்டு.
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தடுக்க நினைத்த அ.தி.மு.க., பா.ஜனதாவின் சதி செயலை கோர்ட்டே முறியடித்த பின்னும், "சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்" என்ற வகையில் 'ஓ.டி.பி.' பெறுவதை தடுத்து விட்டோம் என கூப்பாடு போடுகிறார்கள்.
'திராவிட மாடல்' அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சிறப்பான ஆட்சியை முன்வைத்து தன்னெழுச்சியாக பொதுமக்கள் தங்களை தி.மு.க. உறுப்பினராக இணைத்து வருகின்றனர். அதில், 'ஓ.டி.பி.' பெறுவது என்பது உறுதிப்படுத்தலுக்கான ஒரு சிறு நடைமுறை மட்டுமே. எனினும் கோர்ட்டு வழிகாட்டலை மதித்து அந்த நடைமுறைக்கு மாற்றாக கீழ்க்காணும் நடைமுறையை கடைப்பிடித்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளுமாறு தி.மு.க.வினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய வழிமுறைகள் என்ன?
புதிய வழிமுறைகளின்படி, 'மக்களுடன் ஸ்டாலின்' செயலியை அனைவரும் 'அப்டேட்' செய்து கொள்ளுங்கள், 'ஓ.டி.பி.' கேட்கும் முறை தற்போது இல்லை, செல்போன் எண் கட்டாயம், தற்போதைக்கு, ஒரு குடும்பத்திற்கு ஒரு போன் நம்பரில் 1:4 என்ற அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்கலாம்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு செல்போன் எண் என்ற முறை வந்துள்ளது. ஆனால் வாய்ப்பு இருக்கும் இடங்களில் கிடைக்கின்ற அனைத்து செல்போன் எண்களையும் பெற்றுக் கொள்ளவும்.
செல்போன் எண் தவறாகவோ அல்லது அந்த குடும்பத்தில் இல்லாத நபரின் எண்ணாகவோ இருந்தால், உறுப்பினர் சேர்க்கை மேற்கொண்ட அனைத்து தரவுகளும் நீக்கப்பட்டு இப்பணியை மீண்டும் தொடக்கத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதால் பெறப்படும் செல்போன் எண்ணின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்வது அவசியம்.
செல்போன் எண்ணைப் பதிவிட்டு சமர்ப்பித்தால் உறுப்பினர் சேர்க்கை முடிவடையும். அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து முழுமையாக கணக்கெடுப்புகளை முடிக்க வேண்டும்.
எதிரிகளின் பயமே நமது வெற்றி. 2026 தேர்தலிலும் முதல்-அமைச்சர் தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.