தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்

தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் உண்மை குற்றவளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்
Published on

சுங்குவார்சத்திரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் எச்சூர் ஊராட்சி தி.மு.க. பிரமுகர் ஆல்பர்ட் (வயது 30). கடந்த 5-ந்தேதி இவரை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியும், கத்தியால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்தனர். 4 தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 3 பேர் இந்த கொலை சம்பந்தமாக தாம்பரம் கோர்ட்டில் சரணடைந்தார்கள்.

அவர்களை சுங்குவார் சத்திரம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் கோர்ட்டில் சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை. உண்மை குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்யவேண்டும் என்று கூறி ஆல்பர்ட்டின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார் சத்திரம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியில் ஏறி ஆல்பர்ட் கண்ணீர் அஞ்சலி பேனரை போராட்டதில் ஈடுபட்டவர்கள் கட்டினர். மறியல் குறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மாறிலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உண்மை குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com