கல்வித்துறையை சீரழித்ததுதான் திமுகவின் சாதனை - அன்புமணி

காலியிடங்களில் பத்தில் ஒரு பங்கை கூட நிரப்பாமல் சாதனை மகுடம் சூடிக்கொள்ளத் துடிப்பது வெட்கக்கேடு என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் 11,688 ஆசிரிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இது ஒரு சாதனை என்றும் திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், காலியிடங்களில் பத்தில் ஒரு பங்கை கூட நிரப்பாமல் சாதனை மகுடம் சூடிக் கொள்ளத் துடிப்பது வெட்கக் கேடானதாகும்.

தமிழ்நாட்டில் ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் ஆசிரியர்கள் வரை ஓய்வு பெறும் நிலையில், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டியது அடிப்படைத் தேவையாகும். ஆனால், திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் ஒட்டுமொத்தமாகவே 11,688 பேர் தான் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. இதன் ஆண்டு சராசரி வெறும் 2,337 மட்டும்தான். ஆண்டுக்கு 15 ஆயிரம் ஆசிரியர்கள் ஓய்வுபெறும் நிலையில், வெறும் 2,337 பேரை மட்டும் நியமித்தால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எவ்வாறு தரமான கல்வி வழங்க முடியும் என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.

Also Read
தி.மு.க. கூட்டணி வலுவிழந்து உள்ளது: நயினார் நாகேந்திரன்
கோப்புப்படம்

திமுக அரசால் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் 11,688 ஆசிரியர்களிலும் கூட சுமார் 8 ஆயிரம் பேர் கடந்த 6 மாதங்களில் நியமிக்கப்பட்டவர்கள்தான். அவர்களும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் நியமிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய நான்கரை ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் குறைவுதான். கல்வித்துறையில் திமுக அரசின் அக்கறைக்கு இதுதான் சிறந்த சான்று.

2021-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்த இடங்களை உடனடியாக நிரப்ப முடியாது என்பதால், அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் வரை தற்காலிகமாக 13,331 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதாகவும், அடுத்த 6 மாதங்களில் நிரந்தர ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தற்காலிக ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 6 மாதங்களில் 20,000 ஆசிரியர்களை நியமிக்கப் போவதாகக் கூறிய திமுக அரசு, 5 ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையிலும் கூட வெறும் 11 ஆயிரம் ஆசிரியர்களை மட்டுமே நியமித்ததுள்ளது. இது ஏற்கனவே இருந்த காலியிடங்களை நிரப்பவே போதாது எனும் நிலையில், 5 ஆண்டுகளில் புதிதாக ஏற்பட்ட காலியிடங்களும் நிரப்பப்படவில்லை.

Also Read
சங்பரிவார் சேவகராகவே மாறிய எடப்பாடி பழனிசாமி: கனிமொழி தாக்கு
கோப்புப்படம்

தமிழ்நாட்டில் 3,800-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தான் உள்ளனனர். 31,336 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்து 8,537 ஆசிரியர்கள் மட்டும் தான் உள்ளனர். அதாவது, ஒரு பள்ளிக்கு சராசரியாக 3.46 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் சராசரியாக 3 அல்லது 4 ஆசிரியர்கள் இருந்தால் அவர்களால் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2022&23, 2023&24 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 5.31 லட்சம் குறைந்திருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு கணக்கிட்டால் திமுக ஆட்சியில் மட்டும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 13.28 லட்சம் குறைந்திருக்கக் கூடும். அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு முன் 75 லட்சம் மாணவர்கள் படித்த நிலை மாறி, இப்போது 45 லட்சம் பேர் மட்டுமே படிக்கின்றனர். இதே காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்திலிருந்து 65 லட்சமாக உயர்ந்திருக்கிறது. பத்து ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 30 லட்சம் குறைந்து, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதே அளவு அதிகரித்ததற்குக் காரணம், அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படாததும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததும் தான் ஆகும்.

அரசு கல்லூரிகளின் நிலையும் கவலையளிக்கும் வகையில்தான் உள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. அதனால், அரசு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. நடப்பாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள 1.25 லட்சம் இடங்களில் வெறும் 96 ஆயிரம் இடங்கள் மட்டும்தான் நிரப்பட்டுள்ளன. திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளிலும் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் என அரசு கல்வி நிறுவனங்களை சீரழித்து விட்ட திமுக, அதை மறைப்பதற்காகவே இத்தகைய வெற்று விளம்பரங்களைத் திமுக அரசு செய்து வருகிறது. இதையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள்; ஏமாறவும் மாட்டார்கள். கல்வித்துறையை சீரழித்த திமுகவுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com