உயர்கல்வித்துறையை சீரழித்து புதைகுழியில் தள்ளியதே திமுகவின் சாதனை - அன்புமணி கண்டனம்

உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் எண்ணம் திமுக அரசுக்கு கொஞ்சமும் இல்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2,708 உதவிப் பேராசிரியர்களை நியமிக்கும் அறிவிப்பை கொண்டாட்டமாக வெளியிட்ட திமுக அரசு, வெறும் 5 பேரை மட்டும் அப்பணிக்கு நியமித்து விட்டு மூடுவிழா நடத்தியிருக்கிறது. ஐந்தாண்டு ஆட்சியில் வெறும் 5 உதவிப் பேராசிரியர்களை மட்டுமே நியமித்து அரசு கலை & அறிவியல் கல்லூரிகளை திமுக அரசு சீரழித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை கடந்த அக்டோபர் 16-ம் தேதி வெளியிட்டு, டிசம்பர் 27-ம் தேதி போட்டித் தேர்வுகளை நடத்திய ஆசிரியர் தேர்வு வாரியம் நினைத்திருந்தால், அனைத்து நடைமுறைகளையும் ஜனவரி மாதத்திற்குள் நிறைவு செய்து 2,708 உதவிப் பேராசிரியர்களையும் நியமனம் செய்திருக்க முடியும். ஆனால், மார்ச் 13-ம் தேதி வரை வெறும் 5 உதவிப் பேராசிரியர்களை மட்டுமே நியமனம் செய்திருக்கிறது. மார்ச் 15-ம் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டதால், மீதமுள்ள 2,703 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூற வேண்டுமானால், உதவிப் பேராசிரியர்களின் நியமனத்திற்கு ஓசையின்றி மூடுவிழா நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் திமுக அரசு படுதோல்வியடைந்துள்ளது.

Also Read
கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணையில் முறையான பதிலை வழங்கியிருக்கிறேன் - செந்தில் பாலாஜி பேட்டி
கோப்புப்படம்

மொத்தம் 61 பாடங்களுக்கு உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளில் 42,064 பேர் பங்கேற்றனர். டிசம்பர் 27-ம் நாள் போட்டித்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அதே நாளில் விடைக்குறிப்புகளை வெளியிட்டு, அடுத்த ஒரு வாரத்தில் அதன் மீதான ஆட்சேபனைகளைப் பெற்று, ஜனவரி 5-ம் நாள் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளைத் தொடங்கியிருந்தால் 20-ம் தேதிக்குள் முடித்திருக்க முடியும். அடுத்த 10 நாள்களில் சான்றிதழ் சரிபார்ப்புகளை முடித்து தேர்வு செய்யப்பட்டோருக்கு நியமன ஆணைகளை வழங்கியிருக்க முடியும். சமூகநீதியில் அக்கறையுள்ள அரசு அதைத்தான் செய்திருக்கும்.

ஆனால், திமுக அரசு அதை செய்யவில்லை. போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, இன்றுடன் 82 நாள்கள் ஆகும் நிலையில், மொத்தமுள்ள 61 பாடங்களில் 5 பாடங்களுக்கான விடைத்தாள்கள் மட்டும் தான் திருத்தப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு 13 உதவிப் பேராசிரியர்களை மட்டும் தான் நியமிக்க முடியும். அதிலும் கூட திமுக அரசு செய்த குளறுபடிகளால் 4 பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 11 உதவிப் பேராசிரியர்களில் 6 பேருக்கு தகுதி இல்லை என்று கூறி வெறும் 5 பேருக்கு மட்டுமே நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

Also Read
காருக்குள் தீவைத்து தற்கொலை... தாயை கட்டி அணைத்தபடி இருந்த குழந்தைகள் - நெஞ்சை உலுக்கிய சம்பவம்
கோப்புப்படம்

உண்மையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் எண்ணம் திமுக அரசுக்கு கொஞ்சமும் இல்லை. இந்த விவகாரத்தில் திமுக அரசின் தோல்வியையும், அலட்சியத்தையும் பாமக தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்ததன் பயனாகவே 2,708 உதவிப் பேராசிரியர்களை நியமிக்கும் அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டது. அப்போதும் கூட அந்த நியமனங்களை செய்ய திமுக அரசுக்கு மனம் இல்லை. அதைச் சுட்டிக்காட்டி கடந்த பிப்ரவரி 17-ம் தேதி நான் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து தான் விடைத்தாள்களைத் திருத்தும் பணி தொடங்கப்பட்டது. பெயரளவில் 5 பேரை மட்டும் நியமித்து விட்டு திமுக ஒதுங்கிவிட்டது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த 2021-ம் ஆண்டில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. ஆனால், 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படும் என்று திமுக அரசு அறிவித்தது. ஆனால், அதன் பிறகு இரு ஆண்டுகள் ஆகியும் அதற்கான அறிவிப்பைக்கூட திமுக அரசு வெளியிடவில்லை. அதை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டிய பிறகு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 4,000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை வெளியிட்ட திமுக அரசு, அதையும் பல முறை ஒத்திவைத்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், 4,000 பேருக்கு பதிலாக 2,708 பேரை தேர்ந்தெடுக்க அறிவிக்கை வெளியிடப்பட்டது. இப்போது அந்த அறிவிப்பும் சுருங்கி வெறும் 5 உதவிப் பேராசிரியர்கள் என்ற அளவுக்கு குறைந்து விட்டது.

Also Read
சூனியம் செய்ததாக சந்தேகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கோடரியால் வெட்டிக்கொலை
கோப்புப்படம்

திமுக ஆட்சியில் 35 புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டதாகவும், 252 புதியப் பாடப்பிரிவுகளைத் தொடங்கியதாகவும் திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதன் மூலம் 28,346 மாணவர் சேர்க்கை இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டன. ஏற்கனவே இருந்த 173 பாடப்பிரிவுகளில் 2,008 கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த இடங்களில் கூடுதலாக சேர்க்கப்படும் 30,354 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக மட்டும் 1,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இன்னொரு புறம் ஏற்கனவே காலியாக இருந்த 7,000 ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. இவை அனைத்தையும் நிரப்ப வேண்டும் என்றால், குறைந்தது 10 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 5 பேரை மட்டும் தான் திமுக அரசு நியமித்துள்ளது. தமிழ்நாட்டின் மாணவர்கள் மீதும், அரசு கல்லூரிகள் மீதும் திமுக அரசுக்கு உள்ள அக்கறை அவ்வளவு தான்.

அரசு கலைக் கல்லூரிகளில் போதிய எண்ணிக்கையில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் இல்லாததால் மாணவர் சேர்க்கைக் குறைந்துள்ளது. நடப்பாண்டில் மொத்தமுள்ள 1.26 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்களில் 96 ஆயிரம், அதாவது 76.2 சதவீதம் இடங்கள் மட்டும் தான் நிரம்பியுள்ளன. திமுக ஆட்சியின் முந்தைய 4 கல்வி ஆண்டுகளிலும் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்தே வந்திருக்கிறது. இப்படியாக அரசு உயர்கல்வி நிறுவனங்களை சீரழித்து புதைகுழியில் தள்ளியது தான் திமுக அரசின் சாதனையாகும்.

திமுக அரசு செய்த துரோகத்தால் 2,703 பேருக்கு உதவிப் பேராசிரியர் பணி கிடைக்கவில்லை. ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிட்டு, அவர்களுக்கு ஆசை காட்டி, போட்டித் தேர்வுகளை நடத்தி, கடைசியில் பணி நியமனம் செய்யாமல் துரோகம் செய்த திமுக அரசை உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மன்னிக்க மாட்டார்கள். இதற்காக வரும் தேர்தலில் அவர்கள் திமுகவுக்கு தண்டனை வழங்குவார்கள். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பதவியேற்றதும், தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு தகுதியுடையை தேர்வர்கள் அனைவருக்கும் உதவிப் பேராசிரியர் பணி நியமன ஆணைகள் வழங்க்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com