மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் தேவையா? தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சேலம்
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நிர்வாகத்திறமை இல்லாத திமுக அரசால், ஒருநாள் மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது. முறையாக மழை நீர் வடிகால் பணிகளை நடத்தியிருந்தால் சென்னைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. மழை நீர் தேங்காமல் இருக்க 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டதாக திமுக அரசு கூறியது.
நிதி ஒதுக்காமல் அம்மா உணவகத்தை மூடும் நிலைக்கு கொண்டு வந்த திமுக அரசு கார்பந்தயத்தை நடத்துகிறது. தீவுத்திடலில் கார் பந்தயம் நடத்த 42 கோடி ரூபாய் செலவு செய்வது கண்டிக்கத்தக்கது. திட்டப்பணிகளுக்கே நிதியில்லை என்று கூறும் அரசு, கார் பந்தய சாலைக்கு நிதி ஒதுக்குகிறது. விளம்பரத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது. அமலாக்கத்துறை அதிகாரி குற்றம் செய்து இருந்தால் அவர் கைது செய்யப்பட்டதில் தவறு இல்லை" என்றார்.

