

சென்னை,
ஒரு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் மூளை என்றால், செவிலியர்கள் இதயமாக செயல்படுகிறார்கள்.
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் எட்டாவது மாநில மாநாடு, இன்றைய தினம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. சட்டமன்ற பேரவை தலைவருடன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து உரையாற்றினோம்.
மருத்துவர் கட்டமைப்பில் செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஒரு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் மூளை என்றால், செவிலியர்கள் இதயமாக செயல்படுகிறார்கள். அப்படிப்பட்ட செவிலியர்கள் நலனில் இவ்வரசு மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு வருகிறது.
கடந்த 12 வருடங்களாக தமிழ்நாட்டில் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில்... நமது முதலமைச்சர் ஏழு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று சொன்னார். சொன்னதை செய்து விட்டோம். மூன்று நாட்களுக்கு முன் அதற்கான அரசாணை வெளியிட்டு விட்டோம். ஏற்கனவே இருக்கும் செவிலியர் கல்லூரிகளில் கூடுதல் இடங்களையும் உருவாக்கப் போகிறோம். மேலும் 896 கிராம சுகாதார செவிலியர்களை விரைவில் பணி அமர்த்த இருக்கிறோம்
செவிலியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 4,724 புதிய செவிலியர்களை மாவட்ட நல சங்கங்கள் மூலமாக வெளிப்படையான முறையில், நேர்மையாக பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள். மேலும் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் இருக்கும் 2500 தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணையும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.