‘நீட்’ குறித்து முழுமையாக அறியாமல் எதிர்க்க வேண்டாம் – தமிழிசை சவுந்தரராஜன்

மருத்துவ படிப்பிற்கான இடங்கள் 51 ஆயிரம் இலிருந்து 1,36,000 இடங்களாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
‘நீட்’ குறித்து முழுமையாக அறியாமல் எதிர்க்க வேண்டாம் – தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நேற்று நீட் தேர்வை எதிர்த்து கலைத்துறையினர் சிலர் பேசுவதை கேட்டேன். மருத்துவ படிப்பை பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமலும், இந்த மருத்துவ படிப்பை மேம்படுத்துவதற்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி எவ்வளவு நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பதை பற்றிய தகவல் எதுவும் அறியாமலேயே அவர்கள் பேச்சுகள் இருந்தது. எவ்வளவு எதிர் விமர்சனங்கள் வந்தாலும் என்னை போன்றவர்கள் NEET ஐ ஆதரிப்பது, நான் அரசாங்க மருத்துவமனையும் பார்த்திருக்கிறேன் தனியார் மருத்துவமனையையும் பார்த்திருக்கிறேன். நான் புதுவை துணைநிலை கவர்னராக இருந்தபோது அரசு பள்ளி மாணவர்களுக்காக 10% இட ஒதுக்கீடை நீட் மாணவர்களுக்காக பெற்றோம். அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நான் மக்கள் பவனத்தில் சந்தித்தேன். மருத்துவக் கல்வி யாரிடம் உண்மையாக செல்ல வேண்டும் என்று நாங்கள் எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தோமோ, அவர்களிடம் உண்மையாக அந்த மருத்துவக் கல்வி சென்று அடைந்து கொண்டிருப்பதை கண்டு அகமகிழ்ந்து போனோம். நாங்கள் இந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருப்பதனால் இதை உறுதியாக சொல்ல முடியும். திரைத் துறையினருக்கு இதைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

வசதி படைத்த மாணவர்கள்

மிக மிக சாமானிய குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவராகும் வாய்ப்பை பெற்றிருப்பதை கண்டு வருங்கால மருத்துவ உலகம் மிகச் சிறப்பாக நடைபோட இருக்கிறது என்பதை கண்டு பெருமை பெற்றேன். இன்று போராடுபவர்கள் நீட் இல்லாமல் இருக்கும் பொழுது ஏதோ அதிகமாக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கொண்டிருந்ததைப் போல பேசுகிறார்கள். அப்பொழுதும் வசதி படைத்த மாணவர்கள் டியூஷன் என்ற பெயரில் பிளஸ் ஒன் பாடங்களை முற்றிலுமாக புறந்தள்ளி, அதற்காக நாமக்கல் போன்ற இடங்களில் தனியாக அதிக செலவில் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வசதியானவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் ஒரு வாய்ப்பாகத்தான் நீட்டிற்கு முந்தைய காலம் இருந்தது.

தார்மீக உரிமை

அதனால் 2014 க்கு முன்பு மிக அதிகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல பெருகின. இன்று பல கோடி பணம் செலவு செய்து மருத்துவமனை கட்டி வைத்திருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை நீட் இல்லாமல் மருத்துவராக முடியாது. ஆனால் இதற்கு முன்னால் தங்கள் மருத்துவமனைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை கூட கோடிக்கணக்கில் பணம் செலுத்தி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்ததையும். அவர்கள் படிப்பதற்கு தடுமாறியதையும் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். இன்று பாரத பிரதமரை விமர்சிக்கும் தார்மீக உரிமை இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் யாருக்கும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து ஏனென்றால் இன்று மருத்துவ துறையை அந்த அளவிற்கு விரிவுபடுத்தி இருக்கிறார்.

நுழைவு தேர்வு

அரசாங்க மருத்துவக் கல்லூரிகள் 145 இல் இருந்து 441 ஆக அதாவது 300 சதவீதம் மருத்துவக் கல்லூரிகள் அதிகரித்து இருக்கின்றன. அதே நேரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 242 இல் இருந்து 382 ஆக அதிகரித்து இருக்கின்றன. அதன் வளர்ச்சி விகிதம் 158 சதவீதம்.. மருத்துவ படிப்பிற்கான இடங்கள் 51 ஆயிரம் இலிருந்து 1,36,000 இடங்களாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது 267 சதவீதம் அதிகரித்திருக்கிறது தனியார் மருத்துவக் கல்லூரியில் வாங்கப்படும் கட்டணம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. உலக அளவில் எல்லா பதவிகளுக்கும் படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு இருக்கும் பொழுது மனிதனின் உயிர் காக்கும் மருத்துவத்துறை இன்று பல சவாலான முன்னேற்றங்களை பெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அதற்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயமாக இல்லை. தெலுங்கானா ராஜ்பவனுக்கு கோரிக்கை ஒன்று வந்திருந்தது மிக சாமானிய டெய்லராக பணியாற்றிய ஒரு இஸ்லாமிய சகோதரியின் மகள் எந்தவித கோச்சிங் சென்டரும் போகாமல் முழுமையாக படித்து நீட்டில் தேர்வு ஆகி அவருக்கான புத்தகங்கள் தேவை என்ற ஒரு கோரிக்கை வந்தவுடன் அவருக்கான முழு உதவியும் ராஜ்பவனிலிருந்து நான் செய்தேன.

அதேபோல புதுவையில் அரசு மருத்துவப் பள்ளியில் படித்து நீட் மூலமாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 37 மாணவ மாணவிகளுக்கு என் சொந்த செலவில் மருத்துவ புத்தகங்களும் கோட்டும் ஸ்டெதஸ்கோப்பும் பரிசளித்து அவர்களை பாராட்டினேன். எனது தாழ்மையான வேண்டுகோள் மருத்துவக் கல்வியை பற்றி அறியாதவர்கள் மருத்துவக் கல்விக்கான இடங்கள் எவ்வளவு விரிவாக்கப்பட்டு சாமானிய மக்கள் கூட படிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாய்ப்பையும் NEET அதற்கு வழி வகுக்கிறது என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் எதிர்க்காதீர்கள்.இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் கூட இதன் தேவையை முழுமையாக உறுதி செய்து இருக்கிறது..

இவ்வாறு அதில் கூறியுள்ளார்,

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com