தனிப்பட்ட முறையில் யாரிடமும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

தற்போது மொபைல் போன் மூலமாக ஆன்லைன் கொள்முதல் தயாரிப்பு மோசடி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தற்போது மொபைல் போன் மூலமாக Online purchase Product fraud என்ற மோசடி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொருட்களின் தேவைகளுக்கு ஏற்ப தற்போது ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவது வழக்கமாக இருந்து வரும் நேரத்தில் அதை மையமாக குறிவைத்து பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பாக இ-வர்த்தக வியாபார தளத்தில் தேவைப்படும் பொருட்களை பதிவு செய்து வாங்கப்பட்டு வருகிறது. இதில் உங்களது கடைகளுக்கு அல்லது வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இ-வர்த்தக வியாபார தளத்தில் பதிவு செய்து அதில் இருக்கும் நிறுவனத்தின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் தன்னிடம் நீங்கள் பதிவு செய்த பொருட்கள் குறைந்த விலையில் இருக்கிறது என கூறுவார். மேலும் அந்த நபர் உண்மையாகவே நிறுவனம் வைத்து நடத்தி கொண்டு இருப்பது போன்ற போலியாக ஒரு நிறுவனத்தின் பெயர் மற்றும் போட்டோக்களை தொலைபேசி மூலமாக உங்களுக்கு அனுப்பி வைப்பார். பின்னர் அதை உண்மையென நம்பி அந்த நபரிடம் பொருட்களை ஆர்டர் செய்தால் அதற்காக Delivery charge உடன் மொத்த பணத்தையும் முன்னதாகவே செலுத்த வேண்டுமென கூறி உங்களிடம் அதிக அளவில் பணத்தை பெற்றுக்கொண்டு பொருட்களை அனுப்பாமல் ஏமாற்றிவிடுவார்.
எனவே, இ-வர்த்தக வியாபார தளத்தை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது வர்த்தக வியாபாரியிடம் உள்ள தனிப்பட்ட முறையில் ஆன்லைன் மூலமாக (UPI App) அல்லது வங்கி கணக்கின் மூலமாக பணத்தைச் செலுத்தாமல் இ-வர்த்தக வியாபார தளத்தில் உள்ள பணம் செலுத்தும் முறையில் பணத்தை செலுத்தினால் உறுதி செய்யப்பட்ட (verified bank account) வர்த்தக வியாபார தளம் உள்ளதால் உங்கள் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், தனிப்பட்ட முறையில் யாரிடமும் பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இது போன்ற சைபர் கிரைம் நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் www.cybercrime.gov.in அல்லது 1930 என்ற Toll Free எண்ணிற்கு அழைத்து உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.