இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கம்: தூக்கத்தில் இருக்கிறதா விஜய் அரசு - நயினார் நாகேந்திரன்

வருங்காலத் தூண்களாக இருக்க வேண்டிய இளைஞர்களைப் போதைப் பாதைக்குத் தள்ளிவிட்டு, தவெக அரசு மெத்தனமாக செயல்படுவது தமிழகத்திற்குப் பெரும் சாபக்கேடு.
நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கம் தூக்கத்தில் இருக்கிறதா விஜய் அரசு என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

போதை பொருட்களின் கூடாரமாக

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, கஞ்சா போதைக் கும்பலால் இரு இளைஞர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான இந்த ஆட்சியில், தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறிவிட்டது என்பதையே இந்தச் கொடூரச் சம்பவம் பறைசாற்றுகிறது.

சமீபத்தில் சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவர் தனுஷ், கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் போன்றவர்களின் அகால மரணங்களுக்கு இந்த கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கமே முக்கிய காரணமாகும். வருங்காலத் தூண்களாக இருக்க வேண்டிய இளைஞர்களைப் போதைப் பாதைக்குத் தள்ளிவிட்டு, தவெக அரசு மெத்தனமாக செயல்படுவது தமிழகத்திற்குப் பெரும் சாபக்கேடு.

போராட்டங்கள்

எனவே, இனியாவது கும்பகர்ண தூக்கத்திலிருந்து விடுபட்டு, போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் சமூக விரோதிகள் மீது முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை காக்க பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com