"போதையில்லா தமிழகம்" விழிப்புணர்வு கால்பந்து போட்டி: எஸ்.பி. பரிசு வழங்கல்

காயல்பட்டினம் பகுதியில் போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டோர் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் "போதையில்லா தமிழகம்" என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் அடிப்படையில் அதனை பரப்பும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டம் முழுவதும் அனைத்து கிராம பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையே விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று (2.6.2025) மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் தலைமையில் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டினம் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 4 பொதுமக்கள் அணியினர் கலந்து கொண்டு விழிப்புணர்வு கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இந்த விளையாட்டு போட்டியின் தொடக்க நிகழ்வாக அனைத்து அணி விளையாட்டு வீரர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி., திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. (பொறுப்பு) குருவெங்கட்ராஜ், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் உட்பட காவல்துறையினர், காயல்பட்டினம் நகராட்சி நகர்மன்ற தலைவர் முத்துமுகமது உட்பட பொதுமக்கள் உள்ளிட்டோர் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து இறுதி விளையாட்டு போட்டியை மாவட்ட எஸ்.பி. துவக்கி வைத்தார்.
பின்னர் இந்நிகழச்சியின் நிறைவாக மாவட்ட எஸ்.பி. போதை பொருட்களால் ஏற்படும் அபாயம் குறித்தும், இளைஞர்கள் போதை பொருட்களை தவிர்த்து தங்கள் எதிர்காலத்தில் சமூகத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கால்பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்று முதல் இடத்தை பிடித்த காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் அணிக்கு பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார்.






