

பனமரத்துப்பட்டி:-
ஆட்டையாம்பட்டி அருகே உள்ள மாமுண்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 29), கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு காளிப்பட்டி பகுதியில் மது அருந்தி உள்ளார். அப்போது ஆட்டையாம்பட்டி புற்றுக்கண்ணு பகுதியை சேர்ந்த பெயிண்டரான நவீன் என்ற நவீன்குமார் (27), தனது நண்பர்களுடன் அதே பகுதியில் மது அருந்தியுள்ளார்.
அப்போது அவர்களுக்கிடையே மதுபோதையில் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் கோஷ்டி தகராறாக மாறியது. இதில் சமாதானம் அடைந்து 2 கோஷ்டிகளும் அங்கிருந்து சென்றன. இதனிடையே நவீன் கோஷ்டியை சேர்ந்தவர்கள் மீண்டும் சக்திவேலை துரத்திக்கொண்டு வந்து மருளையாம்பாளையம் அருகே தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் அம்சவல்லி வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்தார். மேலும் இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.