டி.டி.வி. தினகரன் பேட்டி

அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்து விட்டு தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்குவது ஏமாற்றம் அளிக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
டி.டி.வி. தினகரன் பேட்டி
Published on

அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்து விட்டு தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்குவது ஏமாற்றம் அளிக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

அண்ணா படத்துக்கு மாலை அணிவிப்பு

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் உருவ படத்திற்கு டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோடநாடு வழக்கு

கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை அரசு கண்டுபிடிக்க வேண்டும். 70 சதவீதம் உண்மை குற்றவாளிகளை போலீசார் நெருங்கி விட்டனர் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு சரியான முறையில் செயல்பட்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் மற்றும் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.விற்கு நிலைப்பாடு என்ற ஒன்று இல்லை. கட்சியின் சின்னமும், பெயரும் வைத்துக்கொண்டு தொண்டர்களை கையகப்படுத்தி வைத்துள்ளனர். காலம் விரைவில் சின்னத்தை மீட்டு தரும்.

சனாதனம் குறித்து தி.மு.க. பேச்சு

சனாதனம் குறித்து தி.மு.க. பேசுவதற்கு காரணம் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றாததே ஆகும். 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த ஆட்சி தயாராகவில்லை. ஆட்சி குறித்து யாரும் குறைகளை தெரிவித்துவிடக்கூடாது என்பதற்காக சனாதனம் குறித்து பேசிவருகின்றனர்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கர்நாடக அரசு மதிப்பதில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் பேசி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காமல் நிறைவேற்றாத வாக்குறுதிகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை திசை திருப்ப, சனாதனம் குறித்து பேசுகின்றனர்.

ஏமாற்றம் அளிக்கிறது

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்த நிலைபாட்டினை நவம்பர், டிசம்பர் மாதங்களில் எடுத்து விடுவோம். நிர்வாகிகளின் விருப்பம், தொண்டர்கள் விருப்பத்தை கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்று கட்சியாக அ.ம.மு.க. இருக்கும் என்று மக்கள் உணர்ந்து வாக்களிப்பார்கள்.

அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்குவது ஏமாற்றம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com