‘தன் நெஞ்சே தன்னை சுடும்..’ விஜய் குறித்த கேள்விக்கு துரைமுருகன் பதில்

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் த.வெ.க. தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கரூரில் சோகவடு இன்னும் நீங்கவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில், த.வெ.க. தலைவர் விஜய் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற கண்டிப்பாக நான் கரூர் வருவேன் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் எப்போது கரூர் செல்வார்? என்ற கேள்வி எழுந்தது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றது ஏன்? என்று கோர்ட்டும் கேள்வி எழுப்பியிருந்ததது.
இதற்கிடையில், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் த.வெ.க. தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “தன் மீது குற்றம் இல்லையென்றால், த.வெ.க. தலைவர் விஜய் தைரியமாக அவரது தோழர்களுடன் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றிருக்க முடியும். தன் நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் அவருக்கு வெளியே வர பயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் வீடியோ காலில் பேசுகிறார்” என்று தெரிவித்தார்.






