விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்க பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க முதல்-அமைச்சரின் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்க பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
Published on

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றி வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

எல்லாத்துறையிலும் தமிழகம் சிறந்தோங்கி விளங்குகிறது. தொழில் தொடங்குவதற்கான மாநிலத்தில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளதற்கு முதல்-அமைச்சரின் அயராத உழைப்பே காரணம்.

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

அதன்படி வெளிநாட்டில் இருப்பதைபோல நம் நாட்டிலும் விடுமுறை நாட்களில் அரசு பள்ளி மாணவர்களை அருகாமையில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்று தொழில் பயிற்சி அளிக்க முதல்-அமைச்சர் பரிசீலனை செய்து வருகிறார். இதுபற்றி முதல்-அமைச்சர் ஆலோசித்து முடிவு செய்தவுடன் இது நடைமுறைபடுத்தப்படும்.

இதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் இருந்து விளையாட சென்று வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு ஊக்கமும், ஆக்கமும் தருவதற்கு தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com